அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 நவம்பர், 2010
ஓர் மரணம் அறிவிப்பு
08 நவம்பர், 2010
பச்சிளம் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொன்ற அமெரிக்க பெண் கைது
லண்டன் : இப்படியும் ஒரு தாய் இருப்பாளா! என்று யாவரும் பதைபதைக்கும் அளவுக்கு, லண்டனில் வசிக்கும் அமெரிக்க பெண் ஒருவர், பிறந்து 10 நாளேயான தனது பச்சிளம் குழந்தையை, வாஷிங் மிஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் லின்ட்சே பிட்லர். லண்டனில் ஒக்லஹோமாவில் உள்ள பார்லெஸ்வில்லியில் வசித்து வரும் இவருக்கு, 4 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன், மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு மேகி மே என்று பெயரிட்டுள்ளார். இருப்பினும் லின்ட்சேவுக்கு மேகியின் வரவு பிடிக்கவில்லை போலும். அதனால், யாருக்கும் தெரியாமல், வாஷிங் மிஷினில் அழுக்கு துணிகளோடு, பச்சிளம் குழந்தை மேகியையும் போட்டு, 40 நிமிடம் சலவை செய்துள்ளார். இதில் அக்குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
வாஷிங் மிஷினில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை பார்த்து, பயந்து போய் ஓடி வந்த மேகியின் அத்தை, வாஷிங் மிஷினை திறந்த பார்த்த போது தான் அதிர்ச்சியில் உறைந்து போனார். "அடி படுபாவி, பச்சை பிள்ளையை, இப்படி துடிக்க துடிக்க கொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது' என கதறியபடி கேட்டார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசாரும் மருத்துவ குழுவினரும் லின்ட்சே வீட்டுக்கு விரைந்து வந்தனர். வாஷிங் மிஷினில் பச்சிளம் குழந்தை கொடூரமான முறையில் சிதைந்து இருந்ததை பார்த்த, சில போலீசார் கண்ணீர் விட்டனர். உடனடியாக லின்ட்சேயை கைது செய்த போலீசார், அவர் வேண்டுமென்றே குழந்தையை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:தினமலர்
07 நவம்பர், 2010
கடலூரில் சூறாவளி காற்றுடன் கனமழை: மரங்கள் முறிந்தன; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர்:கடலூரில் நேற்று காலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது."ஜல்' புயல் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், கடலில் சீற்றம்அதிகரித்தது. கடலூர், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை பகுதியில் முடசல் ஓடை, முழுக்குத்துறை, பட்டரையடி, மீனவர் காலனி உட்பட பல பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால், கடலோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.நேற்று அதிகாலை 4 மணி முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. காலை 7 மணி முதல் மழை தீவிரமடைந்து 9 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் 12 மணிக்கு புயல் கடலூரை கடந்ததால், மழையின் தீவிரம் குறைந்தது.
கடலூர் - சிதம்பரம் சாலையில் மூன்று இடங்களிலும், கடலூர் - திருவந்திபுரம் சாலையில் கே.என்.பேட்டை மற்றும் நெல்லிக்குப்பத்திலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனால், சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் திருவந்திபுரம் சாலைகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதேபோன்று பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.சூறாவளி காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் கடலோரப் பகுதிகளில், காலை 11 மணிக்கு மின் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. சிதம்பரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. நீர் நிலைகள் நிரம்பி, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வேகமாக ஓடியது.மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, கடலூரில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன; கிராமப் பகுதி பஸ்கள் பெருமளவில் இயங்கவில்லை.
சுவர் இடிந்து 3 @பர் காயம்: புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து, கலைவாணன் மனைவி உஷா(27) பலத்த காயமடைந்தார்.நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (25) வீட்டில் நேற்று மாலை மண் சுவர் மழையில் நனைந்து விழுந்தது. இதில் சிக்கிய ஹேமச் சந்திரன், இவரது மனைவி குணவதி (23) ஆகியோர் மீட்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விழுப்புரம்: மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையில் 396 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.செஞ்சி 49 மி.மீ., திண்டிவனம் 67, விழுப்புரம் 62, திருக்கோவிலூர் 30, கள்ளக்குறிச்சி 15, சங்கராபுரம் 13, உளுந்தூர்பேட்டை 18, மரக்காணம் 64 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வானூரில் 78 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் மொத்தம் 396 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 43.2 மி.மீ., பதிவாகியது.
நன்றி:தினமலர்
விசா கிடைக்காமல் "ஹஜ்' பயணிகள் ஏமாற்றம்: தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கைவிரிப்பு
கீழக்கரை: தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து, மத்திய அரசின் அங்கீகாரம் பெறாத தனியார் டிராவல்ஸ் மூலம் "ஹஜ்' பயணம் புறப்பட்ட ஏராளமானோர், "விசா' கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக "ஹஜ்' பயணம் உள்ளது. தமிழக "ஹஜ்' கமிட்டி வழியாக விண்ணப்பிப்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் இடம் பெற விரும்பாதவர்கள், தனியார் டிராவல்ஸ் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி, "ஹஜ்' பயணம் செல்கின்றனர். மத்திய அரசு அனுமதி பெறாத தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், மும்பையில் உள்ள அங்கீகாரம் பெற்ற டிராவல்ஸ் மூலமாக "விசா' பெற்று, "ஹஜ்' பயணிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள், அதிக தொகை வசூலிப்பதாக மத்திய அரசிற்கும், சவுதி தூதரகத்திற்கும் புகார்கள் சென்றன.
நடப்பாண்டில் "விசா' வழங்குவதற்கு முன், சவுதி தூதரக அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இதில் திருப்தி ஏற்படாததால், தமிழகத்திலிருந்து "விசா'விற்கு அனுப்பப்பட்ட ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் 25க்கும் மேலான தனியார் டிராவல்ஸ்களில் பதிவு செய்த பலர், "விசா' கிடைக்காததால் "ஹஜ்' பயணத்தை தொடர முடியவில்லை.
கீழக்கரையில் இருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் விண்ணப்பித்து, ஏமாற்றமடைந்து திரும்பிய பயணி ஒருவர் கூறியதாவது: "ஹஜ்' பயணத்திற்காக ஏராளமானோர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயண தேதியை உறுதி செய்து, "விசா'வை எதிர்நோக்கி சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தோம். ஆனால், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், "விசா' கிடைக்கவில்லை என கைவிரித்து விட்டனர். இதனால், புனிதப் பயண கனவில் சென்ற பலர், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பி விட்டோம். சிலர் எப்படியும் "விசா' கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சென்னையில் தங்கியுள்ளனர் என்றார்.
திமுக எம்.பி.யின் ராமர் கோயில் ஆசை
பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கையெழுத்திட்ட தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சங்பரிவாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முஸ்லிம்களின் உரிமை கோரிக்கையான பாபரி பள்ளிவாசல் நிலத்தில், பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது. இந்த பணியினை ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடக்கப் பணியாக நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையை அந்த அமைப்பு தொடங்கியது. அந்த கையெழுத்து போடும் வைபவத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் கையெழுத்தை கன்னியாகுமரி திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் கடந்த 22ஆம் தேதி போட்டிருக்கிறார்.
சமிதி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவரும் உடனடியாக முதல் கையெழுத்தாக தனது கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் வெளிவந்த செய்தி குறித்து வி.ஹெச்.பி.யின் பொதுச் செயலாளரும் ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி பொறுப்பாளருமான காளியப்பன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலாயுதம் உள்ளிட்ட சங்பரிவார பிரமுகர்கள் உடனிருந்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும், அதனால் ¬யெழுத்திடுகிறேன் என முகம் நிறைந்த சிரிப்புடன் ஹெலன் டேவிட்சன் எம்.பி. புகைப்படத்துக்காக போஸ் கொடுத்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட சங்பரிவாரின் கொள்கைக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் திமுக எம்பி கையெழுத்திட்டுள்ள விதம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களை அதிருப்தியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திமுக எம்.பி.யின் இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியது. தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீட்டு வாய்ப்பு இருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக&காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் வாய்ப்பு குறைவு. திருச்சியில் பேசிய சோனியாவும் திமுகவைப் பற்றி எதுவும் கூறவில்லை. தனி அடையாளம் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் தங்களை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் பாஜகவோடு கை குலுக்க திட்டமிடுகிறது என்பதை உணர்த்தத்தான் திமுக எம்.பி. கையெழுத்து போட்டாரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாக இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தமுமுக தலைவர் அறிவித்தார்.
தமுமுக தலைவரின் பரபரப்பான பேட்டியினால் மதச்சார்பின்மை பூமியான தமிழகம் விழிப்படைந்தது. திமுக வாரி சுருட்டி எழுந்தது. சங்பரிவாரின் லட்சியத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. முதல் கையெழுத்து போட்ட விவகாரம் அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அரசியல் ரீதியிலான நெருக்கடியில் அக்கட்சி சிக்கித் திணருகிறது. விரக்தியின் விளிம்பில் சென்றுள்ள அக்கட்சி தலைமையின் ஆவேசத்தில் மாட்டிக்கொண்ட திமுக எம்.பி. சங்பரிவாரின் முக்கியப் பிரமுகர்களின் தயவினை வேண்டி தஞ்சம் பெறுகிறார். ராமர் கோயிலுக்காக எம்.பி. கையெழுத்திடவில்லை என பாஜகவின் முக்கியப் பிரமுகர் அறிக்கை வெளியிட்டார்.
தங்களின் ஆதரவு எம்.பி. பாதிக்கப்படக்கூடாதே என்ற பதைபதைப்பு காவி முகாமுக்கு வந்தது. சங்பரிவாரம் எப்படி வேண்டுமானாலும் தனது வேடத்தை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு தற்போதைய எடுத்துக்காட்டு இதுவாகும். தங்களை நல்ல முறையில் உபசரித்து ஆதரவாக செயல்பட்ட ஹெலன் டேவிட்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படாத வகையில் செயல்பட முடிவெடுத்திருக்கிறோம் என காவி முகாம் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்த கையெழுத்து இயக்கம் ராமர் கோயிலுக்காக நடத்தப்பட்டது, அதில் கையெழுத்திட்ட திமுக எம்.பி.யின் செயலை வரவேற்கிறோம் என மாநில பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டு உடைத்திருக்கிறார். ‘‘எல்லாத்துக்கும் தீர்வு வரணும்ல...’’ என்று கூறிக்கொண்டுதான் எம்.பி. கையெழுத்து போட்டுக் கொடுத்தார் என இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் கூறியிருக்கிறார்.
திமுக தனது கட்சி எம்.பி.யிடம் விளக்க நோட்டீஸ் கேட்டிருக்கிறது, விளக்கெண்ணை கேட்டிருக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசிய அளவில் தமிழகத்தின் மதச்சார்ப்பின்மை தத்துவத்துக்கு ஊறு நேரும் வண்ணம் செயல்படும் வண்ணம் தனது கட்சி எம்.பி.க்கு துணிச்சலை திமுக தலைமை கொடுத்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயலும் தீய சக்திகளுக்கு எதிராக குமரி மாவட்ட தமுமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுக தலைமைக்கு உண்டு. நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் இருக்கிறார்.
நன்றி- tmmk .in
05 நவம்பர், 2010
சிறுவர்கள் வாழ்வோடு விளையாடும் "வீடியோ கேம்' : பெற்றோர்களே... உஷார்!
மதுரை :"வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.
தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.
தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது: வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி:தினமலர்.காம்
பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை!

அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் கடந்த 02.11.2010மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.
படங்கள்: கோ. சுகுமாரன்.
இடைக்கால அறிக்கை:சென்ற அக்டோபர் 27, 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் லக்னோ, பைசாபாத், அயோத்தி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற நாங்கள் பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினையில் முக்கிய வழக்காடிகளான (Litigants) அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானி (சுன்னி வக்ப் வாரியம்), உயிருடன் உள்ள மூத்த மனுதாரான முகமது அஷிம் அன்சாரி, ராம ஜென்ம பூமி நியாசின் தலைவர்களில் ஒருவரும், அயோத்தி முன்னாள் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாஸ், விசுவ இந்துப் பரிசத் அயோத்தி தலைமையகத்தில் உள்ள கரசேவபுரம் அலுவலகத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாய, பிரச்சினைக்குரிய பகுதியில் இருக்கும் நிலையை (Status Quo) மேற்பார்வை இடுவதற்கென உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலிக் அகமது, அயோத்தியில் உள்ள சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திரின் மகந்த்தும், ‘அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளருமான யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி, பைசாபாத் நகர பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே (ஈ டிவி), பன்பீர் சிங் (ஆஜ்தக் டிவி), சுமன் குப்தா, பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா எனக் கண்டறிய அகழ்வாய்வு செய்யவதற்காக உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது அதை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் அசோக் கே. மிஸ்ரா (வரலாற்றுத் துறைத் தலைவர், ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகம், பைசாபாத்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ, லிபரேஷன்) உ.பி. மாநில தலைமையகச் செயலர் அருண் குமார், அகில இந்திய முற்போக்கு மகளிர் கழகத் தேசிய துணைத் தலைவரும், ‘டெகிரி-ஏ-மிஸ்வான்’ என்கிற அமைப்பின் பொறுப்பாளருமான தாஹிரா ஹாசன் மற்றும் பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி பதிவு செய்துக் கொண்டோம்.
‘மேலே: அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளர் யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி.
கீழே: சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திர்…
முள்வேளியிட்டு, பலத்த பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்…
அயோத்தி நகரம், கரசேவபுரம், ராமர் கோயிலுக்கான தூண்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கும் வி.இ.ப. அலுவலகம், பெரும் பாதுகாப்புடன் அரசு கையகப்படுத்தி, இரட்டை முள்வேளியிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ள 71.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று உருவாக்கி வழிபாடு நடத்தப்படும் ராம் லல்லாவின் தற்காலிக கோயில் முதலிய பிரச்சினைக்குரிய பகுதிகளை நேரடியாகச் சென்றுப் பார்த்தோம்.
சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆளுகை, சமூக ஒற்றுமை, பன்மைத்துவம் காப்பாற்றப்படுதல் ஆகிய அடிப்படையான நோக்கங்களுடன் இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இப்பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படுதல், நீதி நிலை நாட்டப்படுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் சுருக்கமான (Interim Report) முடிவுகள் பின் வருமாறு. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.
சட்ட அடிப்படைகளைப் புறந்தள்ளி இந்து மத நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பென்ச் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கடும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. முரண்பாடுகள் மிகுந்த ஒரு அகழ்வாய்வை நீதிமன்றம் பெரிய அளவில் சார்ந்திருந்ததும் வரலாற்று அறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் பிரித்துக் கொடுக்கப்பட ஆணையிடப்பட்டுள்ள மூன்று மனுதாரர்களும் (ராம் லல்லாவின் நெருங்கிய நண்பர், சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருப்பதை மூன்று தரப்பினருமே எம்மிடம் தெரிவித்தனர்.இன்னொரு பக்கம் முஸ்லிம் தரப்பு மூத்த மனுதாரரான அஷிம் அன்சாரிக்கும், நிர்மோகி அகாராவின் பாஸ்கர தாசுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு அப்பால் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோதிர் மட சங்கராச்சாரியான ஸ்வருபானந்த சரசுவதிக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் இடையில் இதே நோக்கில் பேச்சுவார்த்தை நடந்துக் கோண்டிருப்பதாக இரு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவிற்குள்ளேயே பாபரின் பெயரில் இன்னொரு மசூதியை அனுமதிக்க மாட்டோம் என்கிறது ராம் ஜென்ம பூமி நியாஸ். அஷிம் அன்சாரி பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தாலும் கூட அப்படி விட்டுக் கொடுக்கும் அதிகாரம் வக்ப் வாரியம் உட்பட யாருக்குமே கிடையாது என முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கூறுகின்றனர்.
மூத்த வழக்காடி அஷிம் அன்சாரியுடன் நாங்கள்…
தீர்ப்பு முஸ்லிம்களுக்கு நீதியை மறுத்துள்ள போதிலும் அவர்கள் தரப்பில் காட்டப்படுகிற பொறுமையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் இந்த இறுக்கமான அமைதி சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்ததன் அறிகுறிதான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப் பின்னணியிலேயே எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள்:
பொதுவாக முஸ்லிம்களில் எல்லா தரப்பிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுவதை நாங்கள் கண்டோம். சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்கும் எனவும், அந்த அடிப்படையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்ஃபரியாப் ஜிலானி மற்றும் காலிக் அகமது ஆகியோர் கூறினர். இடையில் அஷிம் அன்சாரியின் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வருமாயின் அதை ஏற்க தமக்கு தடையில்லை எனவும் காலிக் அகமது கூறினார்.
பேச்சுவார்த்தையில் முனோக்கி நகர்ச்சி இல்லையாயினும் அது நடந்து கொண்டிருப்பதாகவும், 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிபந்தனையின் காரணமாக அதற்கான வேலைகளுக்குத் தான் ஒப்புதல் அளித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷிம் அன்சரி கூறினார். முஸ்லிம்களுக்குள் இரு கருத்து கிடையாது எனவும், எப்படியும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கருத்துதான் உள்ளது எனவும், இரு கருத்துக்கள் உள்ளன என்பது ஊடகங்கள் கட்டுகிற கதை என்றும் ஜிலானி கூறினார். சுன்னி வக்ப் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அஷிம் அன்சாரி கையெழுத்திட்டுள்ளதாகவும் காலிக் அகமது கூறினார்.

வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானியுடன் நாங்கள்…
வழக்கறிஞர் காலிக் அகமதுவுடன் நாங்கள்…இப்பிரச்சினை எப்படியாவது முடிந்தால் நல்லது என ஏற்கனவே பாதிக்கப்பட்ட அயோத்தி முஸ்லிம்களிடம் கருத்துள்ளதையும் காண முடிந்தது. லக்னோவிலிருந்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணிபுரியும் தாஹிரா ஹாசன் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடும் வறுமையிலும், சுரண்டலிலும் உழல்வதைச் சுட்டிக்காட்டினார். பீடி சுற்றுவது, எம்பிராய்டரி செய்வது ஆகிய தொழில்களில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் வருமானம் கூட இல்லையெனவும், இவர்களுக்கு பாபர் மசூதி எல்லாம் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டார். எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடாதா, தொடர்ந்து காசி, மதுரா இன்னும் பல இடங்களில் இந்துத்துவவாதிகள் இதுபோன்ற பிரச்சினை உருவாக்க மட்டார்களா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உண்மைதான், உயிர் வாழும் உரிமையும், சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கையும் இல்லாது போனால், பின் வாழ்வதில் அர்த்தம் என்ன என்றார் தாஹிரா. பொதுவாக முஸ்லிம்களிடம் சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றில் கருத்தொருமிப்பு இருந்தது.
இன்றளவும் அயோத்தியில் உள்ள நூற்றுக்கணக்கான ராமர் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய பூ முதலிய பொருட்களை முஸ்லிம்களே கொடுத்து வருவதையும் நாங்கள் கண்டோம். தீர்ப்பு நாளன்று அச்சத்தின் காரணமாக அயோத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளனர். வக்ப் சொத்தை வாரியமே விரும்பினாலும்கூட மாற்றி அமைக்கவோ, யாருக்கும் கையளிக்கவோ முடியாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டிய போதும், பொதுவான முஸ்லிம் மனநிலை தங்களது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டுவதும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிர்மாணிப்பதும் என்கிற அளவிலேயே உள்ளது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வருமானால் மசூதிக்கு அருகாமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு இடம் அளிக்கும் மனநிலை அவர்களிடம் உள்ளதைக் கண்டோம்.
இந்து தரப்பினரின் கருத்து:இந்து தரப்பினர் என்பது பொதுவான இந்து மக்களைக் குறிப்பதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவான இந்துக்கள் மத்தியில் சமூக ஒற்றுமை, மசூதி, கோயில் இரண்டையும் கட்டிக் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், இதை அரசியலாக்கி முன்னெடுக்க கூடியவர்கள் மிகவும் தீவிரமான கருத்துகள் உள்ளவர்களாக உள்ளது எங்களுக்கு கவலை அளித்தது. டிசம்பர் 6, 1992-ல் மசூதியுடன் கூடவே உடைக்கப்பட்ட ராம் சபுத்ராவில் அனுபவ பாத்தியதை (Possession) உள்ள நிர்மோகி அகராவின் மகந்த் பாஸ்கரதாஸ் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டியாக வேண்டுமெனவும், அரசு கையகப்படுத்தியுள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் வேண்டுமானால் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு தாமே நிலம் தருவதாகவும் கூறினார். 400 ஆண்டுக் காலம் தொழுகை நடந்த இடத்தை எந்த அடிப்படையில் அவர்களுக்கு மறுப்பது என நாங்கள் கேட்ட போது 1939 முதல் அங்கு தொழுகையே நடக்கவில்லை என்றார் பாஸ்கரதாஸ். ஆனால், 1949 டிசம்பர் 22 வரை அங்கே தொழுகை நடந்துள்ளதை உ.பி. மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பாஸ்கரதாஸ் அயோத்திக்குள் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியன நிர்மோகி அகாரவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுக்க ஆணையிடப்படுள்ளது தவறு எனச் சொல்கிறார்களே என நாங்கள் கேட்ட போது, “மொத்த நிலமும் எங்களுக்குச் சொந்தம், வி.இ.ப. உள்ளிட்டவர்களுக்கு இதில் எந்தவித சட்ட உரிமையும் கிடையாது. இந்துக்களின் பெயரால் அரசியல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் அளித்தது. விசுவ இந்துப் பரிசத் முதலியன வெளியில் இருந்து வந்து இங்குப் பிரச்சினை செய்கிறார்கள். அவர்கள் மட்டும் தலையிடாவிட்டால், எப்போதோ பிரச்சினை தீர்ந்திருக்கும். தீர்ப்பைப் பொறுத்தவரையில் நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு, எல்லாவற்றையும் எங்களுக்கே தந்திருக்க வேண்டும்” என்றார்.
நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாசுடன் நாங்கள்…
பைசாபத்திலுள்ள நிர்மோகி அகோரா தலைமையகம்…
திகம்பர அகாராவில் மகந்த் சுரேஷ் தாஸ் ஊரில் இல்லை எனவும் வேறு யாருடனும் நாங்கள் பேச இயலாது என்றும் கூறிவிட்டனர். வி.இ.ப. காரியாலயத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயா யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. மிகப் பெரிய ராமர் கோயிலை மட்டுமே அங்கே கட்ட வேண்டும். வேறு எதையும் கட்ட அனுமதிக்க மட்டோம் என்றார்.
ராமஜென்ம பூமி நியாஸ் காரியாலய பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயாவுடன் நாங்கள்…பின்னணியில் ராமர் கோயில் கட்டுமாணங்கள்…
ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்…
ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி வாரணாசியில் இருந்ததினால் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது. ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது. மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது உண்மையென்றால், தாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவதாக முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர்கள் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.”
நிர்மோகி அகாரா உங்களுக்கு இதில் உரிமை இல்லை எனக் கூறுகிறதே என நாங்கள் கேட்ட போது, 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 65 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்தார். இந்த நிர்மோகி அகாரா 400 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இவர்கள் யார் ராம ஜென்ம பூமிக்கு உரிமைக் கொண்டாடுவது என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமி எனச் சொல்லப்படுகிற இடம் ராம் ல்ல்லாவிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தாலும் நீங்கள் அங்கு கோயில் கட்ட முடியாதே எனக் கேட்டதற்கு, “நிர்மோகி அகாரா, அஷிம் அன்சாரி இருவருக்கும் ஜென்ம பூமிக்கு வெளியே தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எந்த இடம் எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ராம் லல்லாவிற்கு மட்டும் தான் தெளிவாக வரையறுக்கப்பட்டு 130 x 90 அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருலோகி நாத் தான் ராம் லல்லாவிற்காக வழக்குத் தொடுத்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் லல்லாவின் கார்டியனாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேவகி நந்தன் அகர்வால் எங்களுக்காக வழக்காடுகிறார். நியாசும், பரிசத்தும் இதில் ஒரு வாதியாக இல்லையாயினும் திருலோகி நாத்திற்கோ அல்லது தேவகி நந்தனுக்கோ கொடுப்பது எங்களுக்குக் கொடுப்பதுதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.
ஒரு வேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நாங்கள் கேட்ட போது, “உச்சநீதிமன்றத்திற்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நாட்டில் சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் என உச்சநீதிமன்றம் விரும்புமானால், இந்துக்களுக்கு சார்பாகவே அது தீர்ப்பளிக்க வேண்டும். மொத்த நிலத்தையும் இந்துக்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.
ராமரை வழிபட பூசைப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்…
சர்ச்சைக்குரிய இடத்தில் ராமரை வழிபட செல்லும் பஜனை கோஷ்டி…
இதர தரப்பினர் கருத்து:
அரசியல் கட்சி ஒன்றின் ஊழியரான அருண் குமார் பேசும்போது அயோதிக்குள்ளேயே மசூதியை அனுமதிக்க இயலாது எனப் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சிலரிடம் பேசிய போது, மசூதியை அரசு கையகப்படுத்தி உள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் மசூதி கட்டிக் கொள்ள அஷிம் அன்சாரி பாஸ்கரதாசிடம் ஒத்துக் கொண்டுள்ளார் எனவும், அப்படி செய்வதுதான் சரியென்றும் கூறினர். ஆனால், இது அடிப்படை நீதியை மறுப்பதாகாதா, தொடர்ந்து இதேபோல் பிரச்சினைகள் பிற இடங்களில் எழுந்தால் என்ன செய்வது. 71.3 ஏக்கர் நிலத்திற்கு அப்பாலும் கூட மசூதி கட்ட கூடாது என பரிசத்தும், நியாசும் கூறுகிறதே என்று கேட்ட போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.
உள்ளூர் பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே, பன்பீர் சிங் ஆகியோருடன் நாங்கள்…
பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா…
எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா, மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என ஆணித்தரமாக கூறினார். எனினும், அகழ்வாய்வுகளின் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக சூரஜ்பன், டி.என்.ஜா முதலிய வரலாற்று அறிஞர்கள் கூறியது பற்றிக் கேட்டபோது அவர் சற்றுக் கோபமானார். “அகழ்வாய்வுத் துறையே முன்னின்று இதைச் செய்திருந்தால் நியதிகள் பின்பற்றப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும் போது நியதிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தோண்டிய இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், மிருக எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இந்த தரவுகளை நீங்கள் ஏன் பாதுகாத்து வைக்கவில்லை எனவும் நாங்கள் கேட்ட போது, “எலும்புகளைக் பாதுகாத்து வைக்க சில முறைகள் உண்டு. ஆனால், இந்த துலுக்கப் பசங்க (Muslim Fellows) எலும்புகளை அப்படி வைக்கக் கூடாது, வெறும் பாலித்தின் உறையில் வைத்தால் போதும் என முட்டாள்தனமாக சொன்னார்கள். அதனால், அவைகள் எல்லாம் பொடித்து அழிந்துவிட்டன” என அலட்சியமாகக் கூறினார். இப்படியான மனநிலையுடன் கூடிய வரலாற்று அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் எப்படி இருக்கும் என்பதையும், இந்த ஆய்வை நீதிமன்றம் முழுமையாக சார்ந்திருந்தது என்பதையும் நினைத்த போது எங்களுக்கு கவலையாக இருந்தது.
எமது பார்வைகளும், முடிவுகளும்:
சுமூகமான தீர்வும், சூழலும் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து இருந்த போதும், விசுவ இந்துப் பரிசத்தும், ராம் ஜென்ம பூமி நியாசும் இதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வராவிட்டால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வேதாந்தி போன்றவர்கள் பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது இந்த நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சட்ட ஆளுகையையும் மிகப் பெரிய கேள்விக்குள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக வந்தால் ஏற்க முடியாது, இந்த நாட்டையே அழிப்போம் என ஒரு சாரார் கூறும் போது, நீதிமன்றத்திடம் பொறுப்பை கைக்கழுவி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் நினைக்கும் போது வேதனை மட்டுமல்ல, கோபமும் ஏற்படுகிறது. லக்னோ, பைசாபாத், அயோத்தி உள்ளிட்ட அவாத் பகுதி முழுமையிலும் கடும் ஏழ்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பிலும் எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரம் பீடி சுற்றினால் வெறும் 10 ரூபாய் மட்டுமே கூலி. எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களே அதிகமாக உள்ளன. சென்னையில் ஒரு ஆட்டோ 50 ரூபாய் கூலி கேட்கும் தொலைவை லக்னோவிலும், பைசாபாத்திலும் வெறும் 15 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் கடக்க முடியும். இத்தகைய கடும் சுரண்டல் மத அடிப்படையிலான கருத்தியல்களால் மூடி மறைக்கப்படுகிறது. நாங்கள் சந்தித்த இடதுசாரித் தோழர் ஒருவர் பெரியார் ஈ.வே.ரா. என்றொருவர் வடநாட்டில் பிறக்காமல் போனதின் விளைவு இது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக ஒற்றுமையையும் அதே சமயத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நீதியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளே உடனடித் தேவை என நாங்கள் கருதுகிறோம்.
1) நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வெளிப்படையாகப் பேசுகிற சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்த ஜனநாயகத்திலும், மதசார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.
2) இந்திய அளவில் முக்கியமான அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முதலான பேச்சுவார்த்தைக் குழு (Interlocutors) ஒன்றை அரசு உருவாக்கி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்கை எடுக்க வேண்டும். பேச வர மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
3) சட்டப்படியும், நிலவும் மரபுகளின்படியும் 400 ஆண்டுக் காலமாக தொழுகை நடத்தப்பட்ட மசூதியின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள் உள்ளிட்ட எல்லா நிலத்தையும் முஸ்லிம்களுக்கே அளிப்பதுதான் சரியானது. எனினும், நிலவுகிற சூழல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிறுவுவது. ஏற்கனவே ராம் சபுத்ரா உள்ளிட்ட பகுதியில் ராமர் கோயில் ஒன்றை நிறுவுவது, அரசுக் கையகப்படுத்தியுள்ள மிகுதியான இடங்களில் சமூக பன்மைத்துவத்தை ஏற்கும் அருங்காட்சியகம், நூலகம், மருத்துவனை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்குவது என்பதே சரியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். . இப்படியான ஒரு முடிவு ஏற்கனவே சுன்னி வக்ப் வாரிய தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.
4) பச்சை ஏமாற்றாலும், வன்முறையாலும் மசூதியை இடித்து வைக்கப்பட்ட ராமர் சிலைகளையும், தற்காலிக கோயிலையும் ஒரு புனிதத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளதும் இதற்கு அரசே துணைபோகியுள்ளதும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி போன்ற உண்மையான ராம பக்தர்கள் இன்று இருந்திருந்தால் இந்த நிலையைக் கண்டித்திருப்பார்கள். முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போல் மேற்கூறிய இதே காரணங்களைச் சொல்லி ராம் லல்லாவை வணங்க மறுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்து மதத் தலைவர்கள் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.
5) நீதிமன்றத்திடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளாமல், வகுப்பு வெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிற பணியில் அவை ஈடுபட வேண்டுமென குறிப்பாக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் அடித்தள சமூகங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இப் பொது வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்.
தொடர்புக்கு:
People’s Union for Human Rights (PUHR), Tamilnadu.
Federation for People’s Rights (FPR), Puducherry.
Contact: 3/5, First Cross Street, Sasthri Nagar, Adayar, Chennai – 600 020.
Cell: 9444120582, 9894054640.
E-Mail: professormarx@gmail.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , ko.sugumaran@gmail.
04 நவம்பர், 2010
லேப்டாப்பால் ஆண்களுக்கு உயிரணுக்கள் குறையும் அபாயம்!
லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் உள்ளதாக குழந்தைப் பெரும் சிறப்பு நிபுணரும் பெங்களூரு உதவி கருத்தரிப்பு மையத்தின் இயக்குனருமான டாக்டர். காமினி ராவ் தெரிவித்துள்ளார்.
18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லேப்டாப் உபயோகிப்பதால் அதில் இருந்து வரும் வெப்பக் கதிர் ஆண்களை தாக்கி அவர்களின் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குழந்தையின்மையை ஏற்படுத்துவதாகவும், லேப்டாப்பின் மேல் பாகம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருளில் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் கலந்து உள்ளதாகவும் ராவ் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதில் உள்ள நச்சுப் பொருளால் உயிரணுக்கள் குறையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நகர்ப் புறத்தில் இருக்கும் ஆண்களை விட கிராமப் புறத்தில் இருக்கும் ஆண்கள் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் படாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்த ராவ் மாறி வரும் வாழ்க்கை முறைகளுக்கேற்ப நாமும் சில மாற்றங்களை கையாண்டால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
இதன்படி முறையான உடற்பயிற்சி. சூடான நீரை பயன்படுத்தாமை, புகை மற்றும் காபி அருந்தும் பழக்கத்தை கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் போன்ற பழக்கங்களை கடைப் பிடித்து வருவதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்
03 நவம்பர், 2010
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய அயோக்கியத்தனம் நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களின் மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்

ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் பொதுமக்கள் மட்டும் 66 ஆயிரத்து 81 பேரும் 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சியாளர்கள் , 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்ப்படையினர் என்ற தகவல் வெளி வந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரிக்க இராக் போர்முனையில் செய்த மனித குலவிரோத அத்து மீறல்கள் அமெரிக்காவின் நிஜ முகத்தை மீண்டும் மீண்டும் தோலுரித்துக்காட்டி வருகிறது.
அமெரிக்காவின் அட்டூழியங்கள் அனைத்தும் ஒளிப்பட கோர்வைகளும் புகைப்பட ஆதாரங்களும் வெளியாகி காண்பவர்கள் ரத்தத்தை சூடேற்றியுள்ளது.
இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கின்றன. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல் வது, சிறையில் அடைத்து துன்புறுத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைப்படுத்துவது, சிகரெட்டால் கண்ணை சுடுவது, ரத்தக்களறியுடன் கதற விடுவது போன்ற புகைப்படக் காட்சிகள் இதில் உள்ளன.
இந்த ஆவணங்கள் சட்டவிரோ தமாக, தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் மழுப்பியுள்ளது.. இந்தப் போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்கப் போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதி கள் அதிர்ந்து போய் கருத்து வெளி யிட்டனர்.
கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக அமெரிக்கா ஈராக்கில் இருந்த போது கைதிகளை சித்ரவதை செய்தது, சிறைக்கொடுமைகள் ஆகியவற்றினை விக்கிலீக் இணையதள பத்திரிகை ஆதார த்துடன் வெளியிட்டுள்ளதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கலக்கமடைந்துள்ளது. அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் விக்கிலீக்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கொடூரங்களில் கொடூர மான தாக்குதல்களை அமெரிக்க அட்டூ ழிய ராணுவம் நடத்தியதாக ஆவணங் கள் தெரிவிக்கின்றன என்று விக்கிலீக் ஸின் நிறுவனர் ஜூலியா அஸன்ஜா தெரிவிக்கிறார்.
ஈராக்கில் போர்க் குற்றம் நடைபெற்றுள் ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இது என லண்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத்தின் செக்போஸ்டு களில் சிக்கிய 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளான பெண்களையும், குழந்தை களையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களை இரக்கமின்றி அநியாயமாக அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்ற நெஞ்சை உறையவைக்கும் வீடியோ ஆதாரங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் முக்கியமானவையாகும்.
ஈராக்குடன் தொடர்புடைய அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் ரகசிய ஆவணங்களிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என பிரிட்டனின் துணைப் பிரதமர் நிக் க்ளக் தெரிவித்துள்ளார்.
ஆவணங்களில் கூறப்படும் விஷயங்களில் தொடர்புடையவர்களின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்த நிக் க்ளக், 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பதற்கு அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரின் தீர்மானம் சட்டவி ரோதமானது எனத்தெரிவித்துள்ளார்.
ஈராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியா அஸன்ஜா அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
எனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மாறு வேடத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். பெர்லின், லண்டன் என அடிக்கடி நாடு மாறும் இவர், வெவ்வேறு பெயர்களில் விடுதிகளில் தங்குகிறார். தனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் நண்பர்களிடம் கடனு தவிப் பெற்று பணமாக மட்டுமே செல வழிக்கிறார்.
இவர் ஸ்வீடன் நாட்டில் தங்கியிருந்த போது இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டி அமெரிக்க ஆதரவு சக்திகள் புனைந்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விக்கி லீக் நிறுவனர் “இது அமெரிக்க வல்லாதிக்க அரசின் திசை திருப்பும் முயற்சி” என்றார்.
-சப்ரன்ஹபீப்
நன்றி:தமுமுக.காம்
இந்தியாவில் வட்டியில்லா வங்கி மன்மோகன்சிங் விருப்பம்

சர்வதேச அளவில் குறிப்பாக மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைப்பாக காரியம் ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வட்டியில்லா வங்கியான இஸ்லாமிய வங்கியியலை நடை முறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்தக் கோரிக்கையை செயல் படுத்தும் விதமாக, மலேசிய வங்கிகளில் செயல் முறையில் உள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்கிறேன்” என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் கூறினார்.
“மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண் டவாறு பிரதமர் பதில் அளித்தார்.
அரசு முறைப் பயணமாக கிழக்காசிய நாடுகளுக்கு சுற் றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன்இருதரப்பு பொருளா தாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.
வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
வட்டியில்லா வங்கிகள் மட்டுமே ஏழைகளை அநியாய வட்டிக் கடன் கொடுமையில் இருந்து மீட்கும் என நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வட்டியில்லா வங்கி முறை அல்லாத பாரம்பரிய முறை வங்கியியலை பயன்படுத்தும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்காவில் இவ்வாண்டு மட்டுமே 138 வங்கி கள் நொடித்து மூடப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் இது அதிகமாகும். நடப்பு அக்டோபர் மாதம் 17 வங்கிகள்மூடப்ப்படும்நிலையை அடைந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் மிகப் பெருமளவில் வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இது கடந்த 17 ஆண்டு களில் இல்லாத நிலை என கருதப்படுகிறது.
மேலும் 150க்கும் மேற்பட்ட வங்கிகள் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டில் மூடப்படும் நிலை ஏற்படக்கூடும் என்று வட்டி யை ஊக்குவிக்கும் வங்கித்துறை அஞ்சி நடுங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:தாமுமுக.காம்
